புதுடெல்லி: ஜூலை 31க்குள் ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தை அமல்படுத்தும்படி மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்தாண்டு கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட புலம் பெயர் தொழிலாளர்கள், தங்களின் சொந்த மாநிலங்களுக்கு செல்ல முடியாமல் வேலை செய்த மாநிலங்களிலேயே சிக்கி உணவுக்கு கூட வழியின்றி தவித்தனர். இது குறித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இது, கடந்தாண்டு ஜூனில் பிறப்பித்த உத்தரவில், ‘புலம் பெயர் தொழிலாளர்களை 15 நாளில் கண்டறிந்து அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அவர்கள் மீண்டும் பணிக்கு திரும்ப விரும்பினால் ரேஷன், போக்குவரத்து உள்ளிட்ட உதவிகளை செய்ய வேண்டும்,’ என தெரிவித்தது. இந்நிலையில், கடந்த மாதம் 24ம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது புலன் பெயர் தொழிலாளர்கள், ஒன்றிய அரசின் வாதங்களை கேட்ட பிறகு, நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர். இந்த வழக்கில் நீதிபதிகள் அசோக் பூஷன், எம்.ஆர்.ஷா அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில், ‘புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் முழு தகவல்களையும் சேகரித்து, அடுத்த மாதம் 31ம் தேதிக்குள் தேசியளவில் திட்டம் உருவாக்கப்பட்ட வேண்டும். ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தை செயல்படுத்தாத மாநிலங்கள், அதனை ஜூலை 31ம் தேதிக்குள் அமல்படுத்த வேண்டும். குடும்ப அட்டை இல்லாவிட்டாலும், கொரோனா பிரச்னை முடியும் வரை இந்த தொழிலாளர்களுக்கு உணவு தானியங்கள் வழங்கப்பட வேண்டும்.இதற்கு தேவையான உணவு தானியங்களை ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் ,’ என நீதிபதிகள் உத்தரவிட்டனர்….