Monday, June 17, 2024
Home » ஒன்றிய அரசுக்கு எதிராக தேசிய அளவில் 10 நாள் தொடர் போராட்டம்: 19 எதிர்க்கட்சிகள் அறிவிப்பு

ஒன்றிய அரசுக்கு எதிராக தேசிய அளவில் 10 நாள் தொடர் போராட்டம்: 19 எதிர்க்கட்சிகள் அறிவிப்பு

by kannappan

புதுடெல்லி: ஒன்றிய அரசுக்கு எதிராக அடுத்த மாதம் 20ம் தேதி முதல் 30ம் வரையில் நாடு தழுவிய தொடர் போராட்டத்தை நடத்த காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. வரும் 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலில் ஆளும் பாஜவை வீழ்த்த, வலுவான கூட்டணி அமைக்க எதிர்க்கட்சிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் பெகாசஸ் விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு நின்றன. விவாதத்திற்கு ஒன்றிய அரசு ஒப்புக் கொள்ளாததால், மழைக்கால தொடர் முழுவதும் முடங்கியது. அதே சமயம், இந்த விவகாரத்தை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் இடையே ஒற்றுமை ஏற்பட்டுள்ளது. வழக்கத்திற்கு மாறாக, தினசரி கூட்டத் தொடர் தொடங்கும் முன்பாக, எதிர்க்கட்சி தலைவர்கள் ஒன்று கூடி அவையில் எழுப்ப வேண்டிய பிரச்னைகள் குறித்து விவாதித்தனர். இதன் தொடர்ச்சியாக, ஆளும் பாஜ அரசுக்கு எதிராக பொதுவான வியூகங்களை வகுப்பது, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் அனைத்து எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் வீடியோ கான்பரன்சிங் மூலம் நேற்று நடந்தது. இதில், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் சோனியா பேசியதாவது:இந்தியா 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த வேளையில், நமது தனிப்பட்ட மற்றும் கூட்டு தீர்மானத்தை உறுதிபடுத்துவதற்கான சரியான நேரம் இது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் தினந்தோறும் நமது உறுப்பினர்கள் ஆலோசனை நடத்தி ஒன்றுபட்டு செயல்பட்டனர். அந்த ஒற்றுமை, எதிர்கால கூட்டத் தொடரிலும் தொடரும் என நம்புகிறேன். அதே சமயம், நாம் நாடாளுமன்றத்திற்கு வெளியே மிகப்பெரிய அளவில் போராட வேண்டி உள்ளது. 2024 மக்களவை தேர்தலுக்காக நாம் இப்போதிலிருந்தே உழைக்க வேண்டும். நாம் அனைவரும் முறையாக திட்டமிட்டு செயல்பட வேண்டும். நமக்கு வேறு வழியில்லை. நமக்கென பல்வேறு நிர்பந்தங்கள் உள்ளன. அவற்றை எல்லாம் தாண்டி, தேசத்தின் நலனுக்காக நாம் ஒன்றிணைந்து மேலே எழ வேண்டும். 2024 தேர்தலில் வெற்றி பெறுவதே நமது ஒரே இலக்கு. நமது நாட்டின் சுதந்திரத்தை, அரசியலமைப்பு சட்டத்தை மதிக்கும் ஒரு அரசை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும். ஒன்றுபட்டு ஒரே சிந்தனையுடன் செயல்பட வேண்டும். இது நமக்கு மிகப்பெரிய சவால்தான். ஆனாலும் நம்மால் முடியும். ஒன்றுபட்டு உழைப்பதை தவிர நமக்கு வேறுவழியில்லை. இவ்வாறு சோனியா பேசினார். இதைத் தொடர்ந்து, ஒன்றிய அரசின் ஜனநாயக விரோத போக்கை கண்டித்து, பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து அடுத்த மாதம் 20ம் தேதி முதல் 30ம் தேதி வரையில் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் நடத்துவது என கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. நாடாளுமன்றத்தை முடக்கிய ஆளும்  பாஜ அரசுக்கு கூட்டறிக்கையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன், பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை மக்கள் பிரச்னையில் கவனம் செலுத்தும் வகையில் இல்லை எனவும் கண்டனம்தெரிவிக்கப்பட்டது. தலைமையை மறப்போம்ஆலோசனை கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசுகையில், ‘‘கூட்டணிக்கு யார் தலைமை என்பதை மறந்து விடுவோம். நமது தனிப்பட்ட நலன்களை ஒதுக்கி வைப்போம். ஒவ்வொரு எதிர்க்கட்சியையும் அழைத்து வர வேண்டும். நாம் ஒரு முக்கிய குழுவை அமைத்து அடுத்தகட்ட நடவடிக்கை மற்றும் திட்டங்களை முடிவு செய்ய வேண்டும்,’’ என்றார்.பங்கேற்ற தலைவர்கள்எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில், சோனியா காந்தி (காங்கிரஸ்), தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் (திமுக தலைவர்), மம்தா பானர்ஜி (திரிணாமுல் காங்கிரஸ்), சரத் பவார் (தேசியவாத காங்கிரஸ்), உத்தவ் தாக்கரே (சிவசேனா), ஜார்க்கண்ட் முதல்வர் சிபுசோரன் (ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா), காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா (தேசிய மாநாடு கட்சி), மெகபூபா முப்தி (பிடிபி), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்ட்), சீதாராம் யெச்சூரி (மார்க்சிஸ்ட்), சரத் யாதவ் (லோக்தன்ரிக் ஜனதா தளம்) ஆகிய தலைவர்களும் மற்றும் ஆர்ஜேடி, ஏஐயுடிஎப், விடுதலை சிறுத்தைகள், மதச்சார்பற்ற ஜனதா தளம், ஆர்எல்டி, ஆர்எஸ்பி, கேரள காங்கிரஸ் (மானி), ஐயுஎம்எல் ஆகிய கட்சிகளின் முக்கிய தலைவர்களும் பங்கேற்றனர்….

You may also like

Leave a Comment

one × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi