அபுதாபி: இளையான்குடியை சார்ந்த ஒரு தமிழ் குடும்பத்தில் உள்ள மூன்று சகோதரிகளுக்கு கல்வியில் சிறந்து விளங்கியமைக்கு கோல்டன் விசா வழங்கி ஐக்கிய அரபு அமீரக அரசு கௌரவ படுத்தியது. தமிழர்களுக்கு பெருமையான தருணம், தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரிகளுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு அவர்களின் சிறந்த கல்வித் திறனைப் பாராட்டி, மிகவும் விரும்பப்படும் கோல்டன் விசாவை வழங்கியுள்ளது. இந்த கோல்டன் விசா என்பது நீண்ட கால குடியிருப்பு விசா ஆகும்.பிரத்யேகமான பலன்களை அனுபவிக்கும் அதே வேளையில் வெளிநாட்டு திறமையாளர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வாழ, வேலை செய்ய அல்லது படிக்க உதவுகிறது. இது முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர், விஞ்ஞானிகள், சினிமா நட்சத்திரங்கள், சிறந்த மாணவர்கள், பட்டதாரிகள் மற்றும் முன்னணி பிரபலங்களுக்கு மட்டுமே வழங்கப்படும் ஒன்றாகும். அதனடிப்படையில் மூன்று சகோதரிகள் ரிஃபா பாத்திமா, தஸ்னீம் மற்றும் ரீம் என மூவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இவரது தந்தை சையத் அபுதாஹிர்.தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டம், இளையான்குடியைச் சேர்ந்தவர், இவர் தனது இளம் வயதிலேயே துபாயில் குடியேறி சிறந்த தொழிலதிபராக வாழ்ந்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் இவர் துபாயில் பல்வேறு அமைப்புகளை உருவாக்கி அங்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். ஐக்கிய அமீரகத்தில் இறக்கும் துபாய் வாழ் தமிழர்களின் உடல்களை இந்தியாவுக்கு கொண்டு வரும் ஏற்பாடுகளில் உறுதுணையாக இருந்து பல்வேறு தொண்டுகளை ஆற்றி வருகிறார்.மேலும் துபாயில் வேலை தேடி வரும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, மற்றும் அவர்கள் தங்குவதற்கான இட வசதியும் ஏற்பாடு செய்வதோடு அங்கு பல்வேறு தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து சமூகப் பணியாற்றி வருகிறார். ரிஃபா பாத்திமா (22), யுனைடெட் அரபு அமீரக பல்கலைக்கழக அல் ஐனில் மருத்துவ உளவியலில் முதுகலை பட்டதாரி ஆவார். இவர் துபாய் அரசின் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். இந்த பல்கலைக்கழகத்தில் யாரும் அவ்வளவு எளிதாக படிப்பதற்கான அனுமதி கிடைக்காத இடத்தில் இந்தியரான இவர் UAE அரசாங்கத்தின் ஸ்பான்சர் பெற்று படித்து பட்டம் பெற்றுள்ளார்.தஸ்னீம் (20), துபாயில் உள்ள அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் நுண்கலை மற்றும் உள்துறை வடிவமைப்பில் பட்டதாரி, மற்றும் ரீம் (19), ஷார்ஜா பல்கலைக்கழக மருத்துவம் பயின்று வருகிறார். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பிறந்து வளர்ந்த சகோதரிகள் மூவரும் தங்கள் உயர்கல்வியில் குறிப்பிடத்தக்க வகையில் சிறந்த இடங்களைப் பெற்றுள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மூன்று சகோதரிகளுக்கும் தனித்தனியாக அவர்களின் சிறந்த கல்வித் திறனை அங்கீகரித்து பாராட்டும் வகையில் கோல்டன் விசாவை வழங்கி கௌரவித்துள்ளது. அவர்களுக்கு கிரீன் குளோபல் அமைப்பின் மூலம் பாராட்டு விழா நடைபெற்றது. …