ஏர்வாடி, பிப். 14: ஏர்வாடி அருகே உள்ள பொத்தையடியைச் சேர்ந்தவர் ராமர் மனைவி லீலா (50). சம்பவத்தன்று இவர் அங்குள்ள சுடலை ஆண்டவர் கோயில் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த முத்துக்குமார் மகன் வைகுண்டராஜா (26), சிவபெருமாள் மகன் மணிகண்டன் (26), முத்துராஜ் மகன் அரிஹரசுதன் (28) ஆகியோர் லீலாவிடம் கோயிலுக்கு வேலைக்கு வர மாட்டீர்களா என கேட்டுள்ளனர். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த வைகுண்டராஜா உள்பட மூவரும் சேர்ந்து லீலாவை கல்லால் தாக்கினர். இதையறிந்த லீலாவின் மகன் சுபாஷ் (29) வைகுண்டராஜாவை கத்தியால் குத்தினார். இந்த மோதலில் காயமடைந்த வைகுண்டராஜா, லீலா ஆகிய இருவரும் சிகிச்சைக்காக ஏர்வாடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து ஏர்வாடி போலீசில் இருவரும் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, சுபாஷ், மணிகண்டன், அரிஹரசுதன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.