சேலம், மார்ச் 31: சேலம் எல்லை பிடாரியம்மன் கோயிலில் நேற்றிரவு அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் அம்மன் சத்தாபரணம் நடந்தது. சேலம் குமாரசாமிப்பட்டியில் உள்ள எல்லை பிடாரியம்மன் கோயிலில், பங்குனி திருவிழா கடந்த 19ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று முன்தினம், அம்மனுக்கு தங்கக்கவசம் சாத்துப்படி நடந்தது. நேற்று மதியம், கோயில் வளாகத்தில் 1500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து இரவு 10 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் சக்தி, லட்சுமி, சரஸ்வதி அலங்காரத்தில் கரகாட்டம், நையாண்டி மேளம், பேண்டு வாத்தியத்துடன் அம்மன் சத்தாபரணம் நடந்தது. சத்தாபரணம் முக்கிய வீதிகள் வழியாக வந்தது. இன்று (31ம் தேதி) காலை 8 மணிக்கு, மஞ்சள் நீராட்டு, அம்மன் ஊர்வலம் நடக்கிறது. மதியம் 1 மணிக்கு அம்மன் பள்ளியறை செல்லுதல், ஏப்ரல் 1ம் தேதி மாலை 5 மணிக்கு திருவிளக்கு பூஜை ஆகியவை நடக்கிறது.
எல்லை பிடாரியம்மன் கோயில் சத்தாபரணம்
previous post