திருவொற்றியூர், டிச.30: எர்ணாவூர் காலனி பகுதியை சேர்ந்தவர் முனுசாமி (60), கூலி தொழிலாளி. இவர், நேற்று காலை சத்தியமூர்த்தி நகர் அருகே, பக்கிங்காம் கால்வாய் கரையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு சுற்றித்திரிந்த காட்டுப்பன்றி ஒன்று அவரை விரட்டி, பின்பக்கமாக முட்டி, தாக்கியுள்ளது. இதில், முனுசாமிக்கு முதுகு மற்றும் மார்பில் எலும்பு முறிவு மற்றும் முகத்தில் காயம் ஏற்பட்டது. அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு, திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விசாரணையில், காட்டுப் பகுதியில் இருந்து வெள்ளப்பெருக்கில் அடித்து வரப்பட்ட காட்டுப் பன்றிகள், ஆயில் கழிவை சுவாசிக்க முடியாமல், குடியிருப்பு பகுதிகளை நோக்கி வருவதாக கூறப்படுகிறது. எனவே, வனத்துறை அதிகாரிகள், இந்த பகுதியில் திரியும் காட்டு பன்றிகளை பிடித்து, காட்டிற்குள் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.