ஊத்துக்கோட்டை, டிச. 30: ஆரணி பேரூராட்சியில் குப்பை கிடங்கில் கொட்டப்படும் குப்பைகள் சாலையில் சிதறி கிடப்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். பெரியபாளையம் ஆரணி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இங்கு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். மேலும் இங்கு காய்கறி, மளிகை, ஓட்டல்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. இந்த கடைகளில் இருந்து பெறப்படும் குப்பைகளை பேரூராட்சி ஊழியர்கள் சேகரித்து ஊருக்கு வெளியே உள்ள குப்பை கிடங்கில் கொட்டி வருகிறார்கள். பின்னர் அங்கு மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக சரிவர குப்பைகளை தரம் பிரிக்காமல் கொட்டி விட்டு செல்கிறார்கள். இதனால் ஆடு, மாடு, நாய்கள் போன்ற விலங்குகள் இந்த குப்பைகளை கலைத்து விடுகிறது. இதனால் ஆரணி பெரிய ஏரியிலிருந்து ஆரணியாற்றுக்கு உபரிநீர் செல்லும் கால்வாயில் குப்பைகள் தேங்குகிறது. மேலும் பெரியபாளையம் – புதுவாயல் சாலையிலும் குப்பைகள் சிதறிக்கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசி பொதுமக்களுக்கு நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்மந்தப்பட்ட பேரூராட்சி அதிகாரிகள் கால்வாய் மற்றும் சாலையில் சிதறிக்கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆரணி பேரூராட்சியில் சாலையில் சிதறி கிடக்கும் குப்பைகள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை
previous post