மதுரை: மதுரையில் எம்.ஜிஆர் சிலைக்கு காவித் துண்டு போர்த்தப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை, கே.கே.நகர் தோரண வாயில் அருகே எம்.ஜிஆர், ஜெயலலிதா உருவச்சிலைகள் உள்ளன. இதில், எம்ஜிஆர் சிலையின் தோளில் நேற்று யாரோ மர்ம நபர், காவித்துண்டை அணிவித்து விட்டு சென்றுவிட்டார். இந்த தகவல் வேகமாக அதிமுகவினர் மத்தியில் பரவியது. இதையடுத்து மதுரை அண்ணாநகர் போலீசார், விரைந்து வந்து அந்த காவித் துண்டை எடுத்துச் சென்றனர். யார் காவித் துண்டை அணிவித்தது என அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு நடத்தி, தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாஜ, அதிமுகவில் கூடுதல் அதிகாரம் செலுத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது. …