இலவச கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும். ஏனெனில் நாட்டின் வளர்ச்சியை இலவசங்கள் தடுக்கிறது என்று பிரதமர் மோடியின் பேச்சுக்கு சுதந்திர தினத்தன்று பல்வேறு மாநில முதல்வர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் ஏழை,எளிய மக்களின் தேவைகளை நிறைவேற்றுவது இலவசம் இல்லை என்று பதில் அளித்து இருக்கிறார்.இந்தியாவுக்குப் பிறகு சுதந்திரம் பெற்ற பல நாடுகள் வளர்ச்சி இலக்கை தாண்டிவிட்டன. ஆனால் 75 ஆண்டுகளாக இன்னும் நமது நாட்டில் ஏழ்மை இன்னும் ஒழியவில்லை. அதைத்தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சுதந்திர தின உரையில் தொழில் வளர்ச்சி, சமூக மாற்றம், கல்வி மேம்பாடு ஆகியவை ஒரே நேரத்தில் நடக்க வேண்டும். வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக இல்லாமல் சமூக வளர்ச்சியாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். இந்தியா வளர்ச்சி அடைந்த நாடுகள் பட்டியலில் இடம் பிடிக்க கல்வி மற்றும் சுகாதாரம் முக்கியமானதாகும். இலவச கல்வி, இலவச சுகாதாரம் உண்மையில் இலவசங்கள் அல்ல. அவை வறுமையை ஒழிக்க கூடியவை.அமெரிக்கா, இங்கிலாந்து, டென்மார்க், கனடா உள்பட 39 நாடுகளில் குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கப்பட்டு வருகிறது. தரமான கல்வி மற்றும் சுகாதாரத்தால் அவர்கள் வளர்ந்த நாடுகள் பட்டியில் இடம் பெற்று இருக்கிறார்கள். இந்தியாவிலும் இலவச கல்வி, இலவச சிகிச்சை அளிக்கும் போதுதான் அனைத்து சமூகமும் முழு எழுச்சி பெற முடியும். எனவே மருத்துவம் மற்றும் கல்வியில் அரசுகள் நிதி செலவிடுவது இலவசம் ஆகாது. அது சமூகப்புரட்சி. இன்னும் ஒருபடி மேலே சென்று பெண்கள் நிமிர்ந்து நிற்க வசதியாக தமிழக அரசு கட்டணமில்லா இலவச பஸ் வசதியை செய்து கொடுத்து இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் மாணவிகள் கல்வி பெறும் வகையில் அவர்கள் வங்கி கணக்கில் மாதம் ரூ.1000 முதலீடு செய்யும் திட்டத்தை போன்று புரட்சி திட்டத்தை காட்ட முடியுமா?. இந்த திட்டங்கள் எல்லாம் இலவசம் என்றால் சமூகப்புரட்சி, ஒருங்கிணைந்த வளர்ச்சி எப்படி சாத்தியம்?ஒருவேளை ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை, கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியருக்கும் தலா ரூ.15 லட்சம் வழங்குவோம், இந்திய ரூபாய் மதிப்பை அமெரிக்க டாலருக்கு இணையாக உயர்த்துவோம், பெட்ரோல், டீசல் விலையை பாதியாக குறைப்போம், வராக்கடன்களை வசூலிப்போம் என்று வாக்குறுதி அளித்து விட்டு அதற்கு நேர்மாறாக செயல்படுவதும், குறிப்பிட்ட ஒரு சில பெரு முதலாளிகளுக்கு ரூ.10 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்ததும், ரூ. 5 லட்சம் கோடி வட்டியை ரத்து செய்த நடவடிக்கை தான் இன்று தேசத்தை பாதித்து நிற்கிறது. இலவச திட்டங்கள் அல்ல என்பதை உணர வேண்டியவர்கள் உணர வேண்டும்….