உடுமலை, ஜன.31: அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் உடுமலை குட்டை திடலில் காந்திசிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ரங்கராஜ் தலைமை வகித்தார். சண்முகம், கனகராஜ், பாலதண்டபாணி, ஜெகதீசன், சித்ரா, தமிழ்தென்றல் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். பின்னர் உடுமலை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்களுக்கு சம்பள நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
ஆதார் அடிப்படையில் பரிவர்த்தனை முறையை ரத்து செய்ய வேண்டும். கண் விழித்திரை பதிவு செய்வதை கைவிட வேண்டும். வேலை அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். வேலை நாளை 200 ஆகவும், சம்பளத்தை 600 ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும். இத்திட்டத்தை விவசாய பணியிலும் இணைக்க வேண்டும். போடிப்பட்டி, பெரியகோட்டை, தும்பலபட்டி ஊராட்சிகளில் 15 நாட்களுக்கு ஒரு முறை வேலை என்பதை மாற்றி தொடர்ச்சியாக வேலை வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.