மாமல்லபுரம், ஏப்.18: உலக பாரம்பரிய தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 18ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினம், சுற்றுலா பயணிகள், பொது மக்களிடையே தங்களது சமூக கலாச்சார பாரம்பரியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், பாரம்பரிய பெருமை கொண்ட இடங்களை பாதுகாக்கவும் அவற்றின் மீது அக்கறை கொள்ளவும் தூண்டுகிறது. இதையொட்டி மாமல்லபுரத்தில் இன்று (18ம் தேதி) ஒரு நாள் மட்டும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை புராதன சின்னங்களை இலவசமாக சுற்றி பார்க்கலாம் என தொல்லியல் துறை நிர்வாகம் அறிவித்துள்ளது.