வாணியம்பாடி: உதயேந்திரம் பேரூராட்சி 9வது வார்டில் போட்டியிட மாஜி அதிமுக எம்எல்ஏ போலி சான்றிதழ் கொடுத்து வேட்புமனு தாக்கல் செய்ததாக தேர்தல் நடத்தும் அலுவலர் போலீசில் புகார் அளித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சி 9வது வார்டு ஆதிதிராவிடர் பொது பிரிவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வார்டில் போட்டியிட கடந்த 4ம் தேதி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கபில்தேவிடம், முன்னாள் அதிமுக எம்எல்ஏ தமிழரசன் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது தமிழரசன் போலி சாதிச்சான்றிதழ் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான அமர்குஷ்வாஹா, தமிழரசன் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேரூராட்சி செயல் அலுவலரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான குருசாமிக்கு கடிதம் அனுப்பி உள்ளார். இதையடுத்து முன்னாள் எம்எல்ஏ தமிழரசன் மீது வாணியம்பாடி தாலுகா போலீசில், தேர்தல் நடத்தும் அலுவலர் குருசாமி நேற்று புகார் அளித்தார். அதன்பேரில், போலி சாதிச்சான்றிதழ் கொடுத்து மோசடியாக வேட்புமனு தாக்கல் செய்ததாக தமிழரசன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். …