சங்கரன்கோவில்: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பிறந்தநாளை இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாட வேண்டும் என்று தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ கட்சியினருக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பிறந்தநாள் வரும் 27ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள், சங்கரன்கோவிலில் உள்ள சிறப்பு குழந்தைகள் பள்ளியில் முழு நேர உணவு, வாசுதேவநல்லூரில் உள்ள சிறப்பு இல்லத்தில் முழு நேர உணவு வழங்கப்படுகிறது. உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளன்று அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு மோதிரங்கள் மற்றும் குழந்தைகள் காப்பு பெட்டகம் வழங்குதல், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை ஆகியவை வழங்கப்படுகிறது. சிவகிரியில் பழங்குடியினர் மற்றும் இருளர் சமுதாயத்தினருடன் உதயநிதி பிறந்தநாளை நான் பங்கேற்று சிறப்பிக்கும் நிகழ்வு நடக்கிறது. உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை இளைஞர்களின் எழுச்சி நாளாக கொண்டாட வேண்டும். பிறந்தநாளன்று அனைத்து பகுதிகளிலும் கட்சி கொடி ஏற்றி பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்க வேண்டும். இளைஞர் அணி சேர்க்கையை தீவிரப்படுத்தி வரும் நாடாளுமன்ற தேர்தலில் இளைஞரணியின் பங்கு குறித்து தொடர் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்த வேண்டும். இதற்கு மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் அந்தந்தப் பகுதிகளில் இந்நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்த வேண்டும். இவ்வாறு அதில் அழைப்பு விடுத்துள்ளார்….