அரியலூர், மார்ச் 5: அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகேயுள்ள நாயகனைப் பிரியாள், காலனித் தெருவைச் சேர்ந்த 350 குடும்பத்தினர் தங்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கிடுமாறு மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணாவிடம் நேற்று கோரிக்கை மனு அளித்தனர்.
அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
தற்போது உள்ள சிறிய வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இடநெருக்கடியால் வாழ்ந்து வரும் எங்களுக்கு சொந்தமான வீட்டு மனைகள், நிலங்கள் ஏதுமில்லை. இதுகுறித்து 10 ஆண்டுகளுக்கு முன்பே மனு அளித்ததின் பேரில், இப்பகுதி மக்களுக்கு நிலம் வழங்குவதற்காக வாணத்திரையான் பட்டினம் கிராமத்தில் நிலத்தை அரசு கையகப்படுத்தியது. ஆனால் இதுவரை நிலத்தினை பிரித்து பட்டா வழங்கிட வில்லை.
எனவே இட நெருக்கடியில் வாழ்ந்து வரும் எங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் வாலண்டினா, மாவட்ட செயலர் இளங்கோவன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் செந்தில்வேல், பத்மாவதி, கிராம முக்கிஸ்தர்கள் செல்வராசு, பிரபாகரன் ஆகியோர் தலைமையில் மேற்கண்ட 350 குடும்பத்தினர் மனு அளித்தனர்.