உசிலம்பட்டி, மார்ச் 19: உசிலம்பட்டி அருகே, பெண் போலீசார் ஒருங்கிணைந்து சர்வதேச மகளிர் தினத்தை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். உசிலம்பட்டி அருகே செக்காணூரணியை அடுத்துள்ள கருமாத்தூர் தனியார் மகாலில் உசிலம்பட்டி சரக காவல் நிலையங்களில் பணியாற்றும் பெண் போலீசார் சர்வதேச மகளிர் தின விழாவை கொண்டாடினர். இந்த நிகழ்வை செக்காணூரணி போலீஸ் இன்ஸ்பெக்டர் திலகராணி துவக்கி வைத்தார்.
அனைத்து காவல் நிலையங்களிலும் பணியாற்றும் பெண் போலீசார், ஒரே நிறத்தில் சேலை அணிவந்து வந்து உற்சாகமாக ஆடிப்பாடி மகளிர் தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர். காவல்துறையில் பணியாற்றும் அவர்களுக்கு பல்வேறு மன உளைச்சல்கள் இருக்கும். அதனால் காவலர்கள் சிலர் தற்கொலை செய்து கொள்ளும் நிலையும் ஏற்பட்டுள்ளதாக தகவல் பரப்பப்படுகிறது.
இந்நிலையில் உசிலம்பட்டி காவல் சரக பெண் போலீசார், தங்கள் கவலைகள் மற்றும் மன அழுத்தத்தை போக்கும் வகையில் மகளிர் தினத்தை இணைந்து கொண்டாட அனுமதியளித்த உயர் அதிகாரிகளுக்கு நன்றிகளை தெரிவித்தனர். இதுபோல் போலீசாருக்கு புத்தாக்க பயிற்சிகளை வழங்குவதன் மூலம் மேலும் புத்துணர்ச்சியுடன் பணியாற்ற வழிவகை உருவாகும் என்பது இது போன்ற நிகழ்வுகளின் மூலம் உறுதியாகிறது.