பெ.நா.பாளையம், ஆக.30: கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள வீரபாண்டிபிரிவு புனித ஜான்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இலவச கண் மற்றும் பல் பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமை தமிழம் கல்வி அறக்கட்டளையின் தலைவர் பழனிச்சாமி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பள்ளியின் தாளாளர் அரவிந்தன் முன்னிலை வகித்தார்.
இந்த பரிசோதனைகளை தொப்பம்பட்டி பிரிவை சேர்ந்த வாசன் ஐகேர் சார்பில் மார்கெட்டிங் மேனேஜர் பத்மநாதன் தலைமையில் பாலா, முகமது மற்றும் ரூபிகா ஆகியோரும், காரமடை வினிஸ் பல் மருத்துவமனை டாக்டர் மெல்சிஜிடெக் மற்றும் டாக்டர் வசுந்தரா ஆகியோரும் கலந்துகொண்டு கண் மற்றும் பல் குறைபாடுகளை மாணவர்களிடம் கண்டறிந்து, அதற்கான விழிப்புணர்வு மற்றும் அறிவுரைகளை வழங்கினர்.
மேலும் ஒரு சில மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் நிலை இருப்பதால் அவர்களை அவர்களது பெற்றோருடன் மருத்துவமனைக்கு வரவேண்டும் என்று தெரிவித்தனர். இந்த முகாமில் ஒன்று முதல் 12ம் வகுப்பு வரை உள்ள சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் முதல்வர் பாஸ்கர் தலைமையில் துணை முதல்வர் ஷீபா மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.