கிருஷ்ணகிரி, ஏப்.7: சட்ட இயக்க தினத்தை முன்னிட்டு, கிருஷ்ணகிரியில் இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி சுமதி ராய் பிரியா முன்னிலையில், சட்ட இயக்க தினத்தை முன்னிட்டு இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது.
முகாமினை முதன்மை மாவட்ட நீதிபதி தொடங்கி வைத்து பேசியதாவது: சட்டத்தை பற்றி அனைத்து பிரிவு மக்களும் அறிந்து கொள்ளும் வகையில், தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு செயல்பட்டு வருகிறது. இலவச சட்ட உதவிகளை அனைவரும் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்காக நீங்கள் யாருக்கும் பணம் கொடுக்கத் தேவையில்லை. எல்லாவற்றையும் அரசு, முறைப்படி தான் செய்யும். பணம் கொடுத்தால் வேலை கிடைக்கும் என்று யாராவது சொன்னால் நம்ப வேண்டாம்.
நாங்கள் எக்காரணம் கொண்டும், யாரிடத்திலும், எதற்காகவும் பணம் கேட்பதில்லை. உங்களுக்கு இலவசமாகவே சட்ட ஆலோசனை வழங்கப்படுகிறது. எனவே, இந்த வசதிகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் ஜெனிபர் மற்றும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.