கொழும்பு: இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்டார். இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, எரிபொருள், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு கடும் பஞ்சம் ஏற்பட்டு போராட்டம் வெடித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்ததால், தற்காலிக அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றார். இதையடுத்து புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாடாளுமன்றத்தில் இன்று காலை நடைபெற்றது. இந்த அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே, அழகப்பெரும,அனுரா திசாநாயக்க ஆகியோர் போட்டியிட்டனர்.இந்த தேர்தலில் 225 எம்பிக்கள் ரகசிய வாக்கெடுப்பு மூலம் இலங்கை அதிபரை தேர்ந்தெடுக்க உள்ளனர். இத்தேர்தலில், ஆளும் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்கேவும், ஆளும் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியை சேர்ந்த டல்லஸ் அழகப்பெருமாவும், ஜனதா விமுக்தி பெரமுனா சார்பில் அனுரா குமார திஸ்சநாயகேவும் போட்டியிட்டனர். மேலும், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதசா, அதிபர் தேர்தலில் பதவிக்கான போட்டியில் இருந்து விலகுவதாகவும், டல்லஸ் அழகப்பெருமா வெற்றி பெற தனது கட்சியும், கூட்டணி கட்சிகளும் கடுமையாக பாடுபடும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த சூழலில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. இதனைத்தொடர்ந்து உடனடியாக வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது. இந்நிலையில் இலங்கையின் 8-வது அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்டார். 6 முறை பிரதமராக இருந்தவர் முதல்முறையாக இலங்கை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று நடைபெற்ற அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே 134 வாக்குகளும், அழகப்பெரும 82 வாக்குகளும், அனுரா திசநாயக்க 3 வாக்குகளும் பெற்றனர். மொத்தம் உள்ள 225 எம்.பி.களில் 2 பேர் ரகசிய வாக்கெடுப்பை புறக்கணித்த நிலையில் 223 எம்.பி.க்கள் வாக்களித்தனர். மேலும் 4 ஒட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டது. மேலும், கோத்தபய பதவிக்காலமான 2024 வரை ரணில் விக்ரமசிங்கே இலங்கை அதிபராக பதவியில் நீடிப்பார். …
இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு
previous post