Monday, June 17, 2024
Home » இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 57,778 பேர் போட்டி: 218 பேர் போட்டியின்றி தேர்வு; தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கிறது

இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 57,778 பேர் போட்டி: 218 பேர் போட்டியின்றி தேர்வு; தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கிறது

by kannappan

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 57,778 பேர் போட்டியிடுகின்றனர். வேட்புமனு தாக்கல் செய்ததில் 218 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கு வரும் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. 21 மாநகராட்சிகளில் 1,374 வார்டுகள், 138 நகராட்சிகளில் 3,843 வார்டுகள், 490 பேரூராட்சிகளில் 7,621 வார்டுகள் என மொத்தம் 12,838 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.அதன்படி, மாநகராட்சிகளில் 1,374 வார்டுகளுக்கு போட்டியிட 14,701 பேரும், நகராட்சியில் உள்ள 3,843 வார்டுகளுக்குப் போட்டியிட 23,354 பேரும் பேரூராட்சிகளில் 7,621 வார்டுகளுக்கு 36,361 பேரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். மொத்தம் 74,416 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வேட்புமனுக்கள் பரிசீலனை முடிவடைந்ததையடுத்து சில இடங்களில் வேட்பாளர்கள் தங்களின் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர். பல்வேறு மாவட்டங்களில் திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இறுதி வேட்பாளர் பட்டியலை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. அதன்படி, 57,778 பேர் போட்டியிடுகின்றனர். மேலும், அவர்களுக்கான சின்னங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும், மொத்தம் 12,838 வார்டு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் அட்டவணை கடந்த 26ம் தேதி அன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல்கள் வரும் 19ம் தேதி ஒரேகட்டமாக நடைபெறவுள்ளது. மாநகராட்சி வார்டு உறுப்பினர், நகராட்சி வார்டு உறுப்பினர் மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு கடந்த ஜனவரி 28ம் தேதி முதல் இறுதி நாளான பிப்ரவரி 4ம் தேதி வரை மொத்தம் 74,416 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் முதல்நிலை பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் விதிமுறையை பின்பற்றாமல் இருந்ததால், தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலர் அறிக்கையின்படி, தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் முதல்நிலை பேரூராட்சியில் 33 வேட்பு மனுக்கள் பெறப்பட்ட நிலையில், அனைத்து 12 வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டது. மொத்தம் 648 நகர்ப்புற உள்ளாட்சியில் மொத்தம் 2062 வேட்பு மனுக்கள் உரிய பரிசீலனைக்கு பின் நிராகரிக்கப்பட்டன. 14,324 வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை திரும்ப பெற்றுக்கொண்டனர். 218 பதவியிடங்களுக்கு 218 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டம் கானாடு காத்தான் பேரூராட்சி வார்டு 8ல் பதவியிடத்திற்கு வேட்பு மனுக்கள் எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. மாநகராட்சி வார்டு உறுப்பினருக்கு 11,196 பேர், நகராட்சி வார்டு உறுப்பினருக்கு 17,922 பேர், பேரூராட்சி வார்டு உறுப்பினருக்கு 28,660 பேர் என இறுதியாக மொத்தம் 12,607 பதவியிடங்களுக்கு 57,778 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.* மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு கடந்த ஜனவரி 28ம் தேதி முதல் இறுதி நாளான பிப்ரவரி 4ம் தேதி வரை மொத்தம் 74,416 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன.* மொத்தம் 648 நகர்ப்புற உள்ளாட்சியில் 2,062 வேட்பு மனுக்கள் உரிய பரிசீலனைக்கு பின் நிராகரிக்கப்பட்டன. 14,324 வேட்பாளர்கள் வேட்புமனுக்களை திரும்ப பெற்றனர்….

You may also like

Leave a Comment

three × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi