கூடலூர்,மே22: மதவெறி, ஊழல், அடிமைத் தனத்திலிருந்து மக்களை மீட்க வேண்டும்.மக்கள் மத்தியில் நல்லிணக்கமும் சமூக நீதியும் நிலைக்க வேண்டும்.சமூகத்திற்கு பயன் அளிக்கும் வகையில் தொழில் வளர்ச்சி தொடர வேண்டும்.வேலைவாய்ப்பை அதிகரித்து இருக்கும் வேலைகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.விவசாயிகள் உழைப்பாளர் நலன் காக்க வேண்டும்.நாட்டில் ஜனநாயகம் மதச்சார்பின்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும்,பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றும் மாற்றத்தை நோக்கி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கூடலூரில் நடை பயணம் மேற்கொள்ளப்பட்டது.
கூடலூர் புதிய பேருந்து நிலையத்தில் துவங்கி பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை வரை நடைபெற்ற பிரச்சார நடை பயணத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டது. பிரச்சார நடைப்பயணத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கூடலூர் ஒன்றிய செயலாளர் முகமது கனி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் போஜராஜ் துவக்கி வைத்தார்.மாவட்ட குழு உறுப்பினர் குணசேகரன், உறுப்பினர்கள் உசேன்,ரவிக்குமார்,மகேந்திரன்,பிரபாகரன்,சித்தாராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.