ராமநாதபுரம்: தமிழக கடலில் மீன்பிடித்த இலங்கை மீனவர் 6 பேரை வரும் ஏப்.1ம் தேதி வரை சிறையில் அடைக்க ராமநாதபுரம் கோர்ட் உத்தரவிட்டது. இந்திய கடலோர காவல்படை தூத்துக்குடி நிலைய வஜ்ரா ரோந்து கப்பல் சர்வதேச கடல் பகுதியில் 120 நாட்டிக்கல் மைல் தூரத்தில் நேற்று முன்தினம் காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது, தமிழக கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த இலங்கை விசைப்படகு மீனவர்களை இந்திய கடலோர காவல் படையினர் எச்சரித்தனர். ஆனால், தொடர்ந்து மீன்பிடித்த அப்படகை சுற்றிவளைத்து அதிலிருந்த மீனவர் 6 பேரை சிறைபிடித்து படகை பறிமுதல் செய்தனர். விசாரணையில், மீனவர் 6 பேரும் இலங்கை தினேஷ் சத்துரங்க (32), சௌந்திர தில்சான் (22), பசிந்து (18), பூவளு ஒசான் மேலக (24), கும்புரகே அஞ்சன (19), ரோஷன் (24) என தெரிந்தது.தூத்துக்குடி தருவைகுளம் மீன்பிடி துறைமுகம் அழைத்து சென்ற 6 பேரிடம், கியூ பிரிவு போலீசார், கஸ்டம்ஸ், மீன்வளத் துறை, காவல்துறையினர் விசாரித்தனர். மருத்துவப் பரிசோதனைக்குப் பின் 6 பேரும் ராமநாதபுரம் தலைமை குற்றவியல் கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். ஏப். 1ம் தேதி நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி கவிதா உத்தரவிட்டார். இதையடுத்து, 6 பேரும் சென்னை புழல் சிறை கொண்டு செல்லப்பட்டனர்….