முத்துப்பேட்டை: ஆலங்காடு கிழக்கு கடற்கரை சாலையில்ரவுண்டானா சென்டர் மீடியனில் சிக்னல் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு அருகே கிழக்கு கடற்கரை சாலையில் 3 சாலைகள் பிரியும் பகுதியில் ரவுண்டானா மற்றும் போதிய சிக்னல் இல்லாததால் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது. மேலும் கோர விபத்துகள் நடைபெறும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதில் ஒரு பகுதி சாலை அருகே நீண்ட உயரத்தில் உள்ள ரயில்வே மேம்பாலம் உள்ளதால், அதிலிருந்து வரும் அனைத்து கனரக வாகனங்களும் ஆபத்தான நிலையில் வந்து திரும்புகிறது. மேலும் திருத்துறைப்பூண்டி, நாகப்பட்டினம், வேதாரண்யம் போன்ற பகுதிகளுக்கு செல்லும் வாகனங்களும் அதேபோல் மற்றொரு சாலையில் பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் மற்றும் தொலைதூரத்தில் உள்ள இராமநாதபுரம், தூத்துக்குடி போன்ற பகுதிகளுக்கு செல்லும் வாகனங்களும் செல்ல தடும்மாறுவதுடன் அடிக்கடி விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது. இதனால் இந்த ஆபத்தான வளைவு ரவுண்டானா பகுதியில் உள்ள சென்டர் மீடியனில் ஒளிரும் சிக்னல் விளக்குகள் அமைத்து தரவேண்டும் என்று இப்பகுதி மக்கள் நீண்டநாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.