Monday, June 17, 2024
Home » ஆற்றில் மூழ்கி 7 பேர் பலி தவறிழைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

ஆற்றில் மூழ்கி 7 பேர் பலி தவறிழைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

by kannappan

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: கடலூர் மாவட்டம், கெடிலம் ஆற்றில் மூழ்கி சிறுமிகள் உள்பட ஏழு பெண்கள் உயிரிழந்துள்ளனர். இந்த கோர விபத்து அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. குழந்தைகளை இழந்து வாடும் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், தடுப்பணை கட்டுவதற்காகவும், கரைகளை பலப்படுத்துவதற்காகவும் மண் எடுக்கப்பட்ட குழி மூடப்படாமலே இருந்துள்ளது. அதில் நீர் மற்றும் சேறு சேகரமாகியிருந்ததன் காரணமாகவே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. எனவே, இவ்விஷயத்தில் உரிய விசாரணை மேற்கொண்டு, தடுப்பணை கட்டுமானம் மற்றும் கரை பலப்படுத்துதல் பணிகளை மேற்பார்வை செய்த அதிகாரிகள் மற்றும் அலட்சியமாக செயல்பட்டவர்கள் மீது அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விபத்தில் பலியான பெண்கள் மற்றும் சிறுமியரின் குடும்பத்தாருக்கு தமிழக அரசு சார்பில் அறிவித்துள்ள நிவாரணத்தை தலா ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்கிட வேண்டும். இதேபோல் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தாலுகா, பெருமுக்கல் கிராமத்தைச் சேர்ந்த புஷ்பராணி என்பவருடைய பேரன், பேத்திகளான வினோதி, ஷாலினி, கிருஷ்ணன் ஆகிய மூன்று குழந்தைகள் அக்கிராமத்தில் உள்ள செயல்படாத கல்குவாரி குட்டையில் குளிக்க சென்றபோது தவறி விழுந்து உயிரிழந்துள்ளனர். அண்மைக்காலமாக, நீர்நிலைகளில் இளைஞர்கள், சிறுவர், சிறுமியர் மூழ்கி பலியாவது தொடர்கதையாக உள்ளது. எனவே, ஆற்றில் மணல் எடுக்கப்பட்ட பகுதிகள் மற்றும் நீர்நீலைகளில் ஆய்வு செய்து பாதுகாப்பற்ற பகுதிகளில் எச்சரிக்கை அறிவிப்பு மேற்கொள்ள அரசு உத்தரவிட வேண்டும். நீச்சல் தெரியாத காரணத்தினாலும் இப்படிப்பட்ட உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. எனவே, இனிமேல் இப்படிப்பட்ட உயிரிழப்புகளை தடுக்க தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு நீச்சல் பயிற்சியை தமிழக அரசு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

You may also like

Leave a Comment

9 − 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi