ஈரோடு, அக்.21: சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு வெளியூர்களுக்கு 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசுப் போக்குவரத்துக்கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அரசு போக்குவரத்துக் கழக ஈரோடு மண்டல பொதுமேலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஈரோட்டிலிருந்து வார இறுதி நாள்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் வசதிக்காக ஈரோடு மற்றும் அதன் சுற்றுப்புற ஊர்களில் இருந்து கோவை, திருச்சி, மதுரை, சென்னை, திருச்செந்தூர் போன்ற வெளியூர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. வரும் 23, 24ம் தேதிகளில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை விடுமுறையும், வார இறுதி நாள்களுடன் சேர்ந்து வருவதால் இந்த வாரம், 50 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.