கடலூர், பிப். 10: ஆந்திராவில் இருந்து வடலூருக்கு கஞ்சா கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில், மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு அரசு பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த பஸ்சில் வந்த இரண்டு வாலிபர்களின் உடைமைகளை சோதனை செய்த போது, அதில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இரண்டு பேரையும் போலீசார் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில், மந்தாரக்குப்பத்தை சேர்ந்த ஜோதி மகன் சூர்யா (23) மற்றும் மேட்டுக்குப்பத்தை சேர்ந்த ராமர்(23) ஆகியோர் என்பதும், இவர்கள் இருவரும் ஆந்திராவில் இருந்து வடலூருக்கு 1¼ கிலோ கஞ்சாவை கடத்தி செல்ல முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரும் கொடுத்த தகவலின் பேரில் பண்ருட்டியை அடுத்த ராணிப்பேட்டையை சேர்ந்த பூபாலன்(23) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து ஆந்திராவில் இருந்து கொண்டு வரப்பட்ட 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஆந்திராவில் இருந்து வடலூருக்கு கஞ்சா கடத்திய 3 பேர் கைது
previous post