திருவாடானை, ஜூன் 2: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி விசாகத் திருவிழா தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திரளானோர் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர். திருவாடானையில் ராமநாதபுரம் தேவஸ்தானம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட ஆதிரெத்தினேஸ்வரர் சமேத சினேகவல்லி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர், சுந்தரர், அப்பர் ஆகியோர் வந்து பாடல் பெற்ற ஸ்தலமாகும். இக்கோயிலின் வைகாசி விசாகத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டு வைகாசி விசாகத் திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது.
விழாவின் சிறப்பு நிகழ்வாக ஒன்பதாம் திருநாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. பெரிய தேரில் ஆதிரெத்தினேஸ்வரர் பிரியா விடையுடனும், மற்றொரு தேரில் சினேகவல்லி தாயாரும் 4 வீதிகளிலும் வலம் வந்து மாலை 6 மணி அளவில் நிலைக்கு வந்து சேர்ந்தது. இன்று தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன், சரக பொறுப்பாளர் பாண்டியன் மற்றும் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.