ஆண்டிமடம், பிப்.10: ஆண்டிமடம் அருகே 6 மாதமாக குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே விளந்தை ஊராட்சி அன்னங்காரகுப்பம் கிராமத்தில். சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மேல்நிலை நீர் தேக்க தொட்டி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது இந்நிலையில் போர்வெல் மின் மோட்டார் 6 மாதத்திற்கு முன் பழுதடைந்தது. அதன்பின் இதுவரை சீரமைக்கப்படவில்லை.
இதனால் அப்பகுதி மக்களுக்கு சுமார் 6 மாதகாலமாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. குடிநீருக்காக கிராம பொதுமக்கள் சுமார் 4 கி.மீ. தூரம் சென்று தண்ணீர் எடுத்து வரும் சூழல் உள்ளது. இதனால் வேலைக்கு செல்பவர்கள் பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் விவசாயிகள் என அனைத்து தரப்பு மக்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் இது குறித்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பகுதி மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த ஆண்டிமடம் போலீசார் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் ஸ்ரீமுஷ்ணம் -ஆண்டிமடம் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் பஸ் போக்குவரத்து பாதித்தது.