சோளிங்கர்: ஆசைக்கு இணங்க மறுத்ததால் 2குழந்தைகளின் தாய் இரும்பு ராடால் அடித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது தங்கையின் கணவனை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த தகரகுப்பம் ஒட்டனேரி கிராமத்தைச் சேர்ந்தவர் முனிசாமி. இவரது மனைவி கவுதமி(32). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். முனிசாமி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். கவுதமி ராணிப்பேட்டையில் உள்ள ஷூ கம்பெனியின் தொழிலாளி. கவுதமியின் தங்கை பிரியா. இவரது கணவர் சஞ்சீவிராயன்(35), கூலித்தொழிலாளி. அதே கிராமத்தில் வசித்து வருகின்றனர்.இந்நிலையில் சஞ்சீவிராயன் அடிக்கடி கவுதமி வீட்டுக்கு செல்வாராம். அப்போது தனது ஆசைக்கு இணங்கும்படி கூறியுள்ளார். இதற்கு கவுதமி மறுத்துள்ளார். ஆனால் தொடர்ந்து சஞ்சீவிராயன் டார்ச்சர் கொடுத்து வந்துள்ளார். இதேபோல் நேற்று முன்தினமும் கவுதமியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் வேதனையடைந்த கவுதமி, இதுகுறித்து சோளிங்கர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், சஞ்சீவிராயனை அழைத்து எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர். போலீசில் புகார் செய்ததால் ஆத்திரமடைந்த சஞ்சீவிராயன், கவுதமியை கொல்ல திட்டமிட்டுள்ளார்.இந்நிலையில் நேற்று கவுதமி வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டு மாலை தனது தோழிகளான அதே கிராமத்தை சேர்ந்த சோனியா, கோமளா ஆகியோருடன் வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த சஞ்சீவிராயன், கவுதமியை வழிமறித்து ஆபாசமாக பேசியுள்ளார். இதில் இருவரிடையே வாக்குவாம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சஞ்சீவிராயன் கல்லால் தாக்கியுள்ளார். மேலும் தான் மறைத்து வைத்திருந்த இரும்பு ராடால் கவுதமியின் தலை மீது சரமாரி தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த அவர் அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதை தடுக்க முயன்ற கவுதமியின் தோழி சோனியாவையும் தாக்கியுள்ளார். இதில் அவர் லேசான காயத்துடன் தப்பினார். இதையடுத்து சஞ்சீவிராயன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.இதைபார்த்து அதிர்ச்சியடைந்த மற்றொரு ேதாழி கோமளா மற்றும் பொதுமக்கள் சோனியாவை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவலறிந்த சோளிங்கர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கொலையாளி சஞ்சீவிராயனை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்….