செய்யாறு, நவ.1: செய்யாறு அருகே சின்ன ஏழாச்சேரி கிராம நத்தம் ஆக்கிரமிப்பை கண்டித்து கிராம மக்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே வெம்பாக்கம் தாலுகா அலுவலகத்தில் சின்ன ஏழாச்சேரி கிராம பகுதியில் மாரியம்மன் கோயில் எதிரில் சுமார் 65 சென்ட் நத்தம் நிலத்தில் அப்பகுதி மக்கள் சிலர் ஆக்கிரமித்து செய்துள்ளனர். இது தொடர்பாக ஊராட்சி சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பின்னர் வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஊராட்சி நிர்வாகம் தரப்பிற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியது. ஆனாலும் கிராம மக்களை மீறி ஆக்கிரமிப்பாளர்கள் தொடர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் கிராம மக்கள் கூடி செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஓ.ஜோதியிடம் நேற்று மதியம் சுமார் 1 மணி அளவில் ஆக்கிரமிப்பு அகற்ற கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து வெம்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகம் சென்று கிராம மக்கள் ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி மதியம் 2 மணி முதல் 3 மணி வரை உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
தொடர்ந்து வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உரிய ஆவணங்கள் கேட்டு பெற்று தீவிர விசாரணை நடத்தினார். பின்னர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் சின்ன ஏழாச்சேரி கிராமத்திற்கு நேரில் சென்று ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டபோது ஆக்கிரமிப்பாளர்கள் சிலர் தொடர் எதிர்ப்பு தெரிவித்தனர். கிராம மக்களுடன் எதிர்ப்பாளர்களிடம் தூசி காவல் நிலைய காவலர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி 2 ஜேசிபி மூலம் மாலை 4 மணி முதல் 6 மணி வரையில் ஆக்கிரமிப்புகளை வெம்பாக்கம் வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி, துணை வட்டாட்சியர் காயத்ரி மற்றும் வருவாய் துறையினர் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன இதனால் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்தில் குடிநீர் நீர் தேக்க தொட்டி, நூலகம், ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும் உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சித் துறையிடம் ஆலோசிக்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.