அரியலூர், மார்ச் 22: அரியலூர் மாவட்டம் அஸ்தினாபுரம் கிராமத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியரும், பறக்கும் படை அலுவலருமான சுசிலா தலைமையிலான குழுவினர் நேற்று வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த காரை மறித்து சோதனை செய்ததில், உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1.40 லட்சம் பணம் எடுத்துச் செல்வது தெரியவந்தது.
இதையடுத்து காரில் இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், ஜெயங்கொண்டம் அடுத்த இலையூர் கிராமத்தை சேர்ந்த அருள்ராஜ்(45), தனது வயலில் விளைந்த முந்திரி கொட்டைகள் விற்ற பணத்தை எடுத்துக் கொண்டு திருச்சிக்கு கார் வாங்க செல்வதாக தெரிவித்தார். இதையடுத்து உரிய ஆவணங்களை காண்பித்து விட்டு பணத்தை பெற்றுச் செல்ல அறிவுறுத்திய பறக்கும் படையினர், கோட்டாட்சியரும், தேர்தல் நடத்தும் உதவி அலுவலருமான ராமகிருஷ்ணனிடம் பணத்தை ஒப்படைத்தனர்.