போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி, கோனனூர் கிராமத்தில் கடந்த 22ம்தேதி முதல் மகாபாரத பிரசங்க அக்னி வசந்த விழா நடைபெற்று வருகிறது. தினமும் மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை வெட்டுவானம் கலைமாமணி முத்தமிழ் வித்தகி ரேவதி சார்பில், மகாபாரத சொற்பொழிவு நடந்து வருகிறது. கூச்சனூர் ராஜா சபா குழுவினரால் தினமும், இரவு தெருக்கூத்து நாடகம் நடக்கிறது. முக்கிய நிகழ்வான அர்ஜூனன் தபசு நிகழ்ச்சி நடந்தது. இதில், நாடக கலைஞர் ஒருவர் அர்ஜூனன் வேடமிட்டு தபசு மரம் ஏறினார். அப்போது திருமணமாகாத பெண்கள் விரைவில் திருமணமாகவும், திருமணமானவர்கள் குழந்தை பாக்கியம் கிடைக்கவும் வேண்டி, தபசு மரத்திலிருந்து அர்ஜூனன் வீசிய எலுமிச்சம் பழத்தை போட்டி போட்டு பிடித்தனர். முன்னதாக லிங்கத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.