உத்திரமேரூர்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்த பருவமழையால், அனைத்து நீர்நிலைகளும் நிரம்பியுள்ளன. இதையொட்டி, உத்திரமேரூர் பகுதியில் உள்ள பென்னாலூர் குளத்தில் தண்ணீர் நிரம்பியுள்ளது. இங்கு, அப்பகுதியை சேர்ந்த பலர், மீன்பிடித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் சிலர் பென்னாலூர் குளத்தில் வலைகளை விரித்து மீன்பிடித்தனர். அப்போது, ஒரு வலையில் மீன்கள் சிக்கின. அதனை கரைக்கு கொண்டு வந்தபோது, அரிய வகை நட்சத்திர ஆமை இருந்தது.தகவலறிந்து வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். அதில், அரிய வகை நட்சத்திர ஆமை என தெரிந்தது. இதையடுத்து அந்த ஆமையை கைப்பற்றி, கொண்டு சென்றனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘சமீபத்தில் பெய்த மழையால் குளங்கள் நிரம்பியுள்ளன. பல இடங்களில் இருந்து வந்த தண்ணீரில் இந்த நட்சத்திர ஆமை அடித்து வந்து இருக்கலாம். இத்தகைய ஆமை, மருத்துவ குணம் கொண்டது. மருந்து தயாரிக்க பயன்படுத்தப்படும் அரிதான வகையாகும். எனவே அதை கைப்பற்றி, பாதுகாப்பாக வைத்துள்ளோம் என்றனர்….