திருமயம், மார்ச் 28: அரிமளம் அருகே அம்மன் கோயில் பங்குனி திருவிழாவில் திரளான பக்தர்கள் பால்குடம் காவடி எடுத்து வழிபாடு நடத்தினர். புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள ஓணாங்குடி முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து நேற்று முன் தினம் காப்பு கட்டுதலுடன் முதல் நாள் திருவிழாவும், நேற்று இரண்டாம் திருவிழாவும் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று இரண்டாம் திருவிழாவை முன்னிட்டு அப்பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் பெருமாள் கோயிலில் இருந்து பால்குடம், காவடி, பறவை காவடி எடுத்து ஊரின் முக்கிய வீதிகளில் ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலமாக வந்தனர். இதனை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள வீரமாகாளி அம்மன் கோயிலில் பால்குடம், காவடிகளை இறக்கி வைத்து நேத்திக்கடன் செலுத்தினர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் அபிஷேகம் நடைபெற்றது. விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பலர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதான வழங்கப்பட்டது.
அரிமளம் அம்மன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவில் பால்குடம் எடுத்து வழிபாடு
previous post