சிங்கம்புணரி, பிப். 25: சிங்கம்புணரி அருகே அரளிப்பாறையில் நடந்த மஞ்சு விரட்டை ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்டனர். சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே அரளிப்பாறை பாலதண்டாயுதபாணி கோயில் மாசி மகத்திருவிழாவை முன்னிட்டு நேற்று மஞ்சுவிரட்டு நடைபெற்றது. முன்னதாக மஞ்சுவிரட்டில் மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகள் கட்டுமாடுகளாக ஆங்காங்கே அவிழ்த்து விடப்பட்டன.
மஞ்சுவிரட்டை காண பெண்கள், குழந்தைகள் என பல்லாயிரக்கணக்கில் குவிந்திருந்த ரசிகர்கள் குன்று மீது பாறையில் அமர்ந்து கண்டு ரசித்தனர். இதனால் மலை முழுவதும் மனித தலையாய் காட்சியளித்தன. மாடுகளை பிடிக்க முயன்ற 60க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது. இவர்களுக்கு பிரான்மலை வட்டார மருத்துவர் நபிஷா பானு தலைமையில் 30க்கும் மேற்பட்டோர் சிகிச்சை அளித்தனர்.
இதில் நெற்குப்பை மெய்யர் (17), வத்திப்பட்டி நத்தம் ஜெயபால் (20), ஏனாதி வினோத்குமார் (20), சிங்கம்புணரி பாண்டி (20), சாத்தி கோட்டை சற்கு (21), பெரியகருப்பட்டி முத்துராமன் (47), மேலுர் தாமரைபட்டி பெரியகருப்பன் (70), முறையூர் பெரியசாமி (62) உள்ளிட்ட 14 பேர் மதுரை, சிவகங்கை அரசு மருத்துவமனைகளுக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். டிஎஸ்பி ஆத்மநாதன், மற்றும் 150க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.