திருவொற்றியூர், மார்ச் 6: திருவொற்றியூர் மண்டலம், 10வது வார்டு பூந்தோட்ட தெருவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெரும்பாலும் ஏழை குடும்பத்தை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர். இளங்கலை கணினி பயன்பாட்டியல் துறை சார்ந்தவர்கள் எளிதாக கல்வி பயிலும் வகையில் கல்லூரிக்கு கணினி வழங்க வேண்டும் என்று மாணவ, மாணவியர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கல்லூரிக்கு கணினி வகுப்பறை புதுப்பிக்கப்பட்டு அங்கு மேஜை, நாற்காலி மற்றும் 16 அதி நவீன கணினி அமைக்கப்பட்டது. அதேபோல் இங்குள்ள மாநகராட்சி ஆரம்ப பள்ளிக்கு ரூ.10 லட்சம் செலவில் 6 அதிநவீன கணினியுடன் ஸ்மார்ட் கிளாஸ் ரூம் அமைக்கப்பட்டது.
இதை தொடர்ந்து, இந்த கணினிகளை மாணவ, மாணவியர்களின் பயன்பாட்டுக்கு வழங்கும் நிகழ்ச்சி மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு தலைமையில் நடந்தது. கலாநிதி வீராசாமி எம்பி கணினியை இயக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் விஜயா, உதவி செயற்பொறியாளர் நமச்சிவாயம், திமுக நிர்வாகிகள் ஆர்.சி.ஆசைத்தம்பி, எம்.வி.குமார், ஆர்.எஸ்.சம்பத், குமரேசன், கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.