Saturday, May 18, 2024
Home » அரசு இடத்தை சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமிப்பு ஒரு மாதத்திற்குள் கட்டிடங்களை அகற்ற கெடு

அரசு இடத்தை சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமிப்பு ஒரு மாதத்திற்குள் கட்டிடங்களை அகற்ற கெடு

by kannappan

வல்லம்:தஞ்சாவூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருமலைசமுத்திரத்தில் இயங்கி வருகிறது சாஸ்த்ரா பல்கலைக்கழகம். தமிழக அரசின் திறந்த வெளிச்சிறைக்கு சொந்தமான நிலத்தில் 31 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து 28 கட்டிடங்களை கட்டி உள்ளது. இந்த ஆக்கிரமிப்பை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு கடந்த 2018 அக்டோபர் 3ம் தேதியுடன் காலக்கெடு முடிவடைந்தது. அப்போதைய வட்டாட்சியர் அருணகிரி பல்கலைக்கழகத்திற்கு சென்று அளவிடும் பணியை தொடங்கினர்.பின்னர் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சேர்ந்து அப்போதைய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து மாணவர்கள் படிக்க கூடிய நேரத்தில் கட்டிடங்கள் இடிக்கப்பட்டால் அவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படும் என மனு அளித்தனர். அந்த மனு மீதான விளக்கத்தை அளிக்க அப்போது தமிழக முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமியிடம் விளக்கம் கேட்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ககன்தீப் சிங் பேடி ஐஏஎஸ் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழுவை அரசு அமைத்தது. மூன்றாண்டுகளில் அக்குழு எந்த ஒரு விசாரணையும் நடத்தாத நிலையில் புதிதாக பொறுப்பேற்ற திமுக அரசு அந்தக் குழுவை கலைத்துவிட்டு தமிழக அரசு நில சீர்திருத்த இயக்குனர் ஜெயந்தி ஐஏஎஸ் தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவை அமைத்தது.இக்குழுவினர் கடந்த 22.10.21 அன்று தஞ்சை வந்து சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மற்றும் எவ்வளவு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து ஆய்வு செய்தனர். தொடர்ந்து, தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், நேற்று சாஸ்த்ரா பல்கலைக்கழக வளாகத்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. அதில்,‘‘‘‘நான்கு வாரங்களுக்குள் (24.03.2022) ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்ற வேண்டும்’’’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸ் தஞ்சை கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா, கோட்டாட்சியர் ரஞ்சித் மற்றும் தஞ்சை வட்டாட்சியர் மணிகண்டன் ஆகியோர் கல்லூரி நிர்வாகத்திடம் கொடுத்தனர். ஆக்கிரமிப்பு அகற்றப்படாத பட்சத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அகற்றப்பட்டு அதற்கான செலவுத் தொகை கல்லூரி நிர்வாகத்திடம் பெறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது….

You may also like

Leave a Comment

three × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi