நிலக்கோட்டை, ஏப். 5: நிலக்கோட்டை அருகே அம்மையநாயக்கனூரில் பழமை வாய்ந்த அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் பங்குனி திருவிழா கடந்த மார்ச் 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
அன்று முதல் தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தன. குதிரை, கேடயம், ஷேசம், மயில், அன்னம் உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் எழுந்தருளி நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நேற்று முன்தினம் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். 9வது நாளான நேற்று வாணவேடிக்கைகள் முழங்க பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்ட பூப்பல்லக்கில் அம்மன் பவனி வந்து அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை தக்கார் பாலசரவணன் மற்றும் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.