அம்பை, பிப்.28: களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பை கோட்ட வனத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் அம்பையில் நடந்தது. கூட்டத்திற்கு களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குநர் இளையராஜா தலைமை வகித்தார். வேளாண் இணை இயக்குநர் கற்பக ராஜ்குமார், பாபநாசம் வனச்சரகர் சத்தியவேல், அம்பை வனச்சரகர் நித்யா முன்னிலை வகித்தனர். இதில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் சொரிமுத்து, மாவட்டச் செயலாளர் முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோர் கோரிக்களை விளக்கிப் பேசினர்.
மலையடிவார கிராமங்களில் வனவிலங்குகள் ஊடுருவுவதை தடுக்கும் விதமாக வனப்பகுதியில் காலியான பகுதிகளில் விதைப்பந்துகளை வீசி வனவிலங்குகளின் ஆகாரத்திற்கு செடிகளை வளர்க்க வேண்டும். தகுந்த இடங்களில் தண்ணீர் தொட்டிகள் அமைக்க வேண்டும். சூரிய மின்வேலி அமைத்து பராமரிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.இதேபோல் பாபநாசம் மேற்குத் தொடர்ச்சி மலை திருப்பணியாபுரம் கிராம மக்கள் தங்கள் பகுதிக்கு மின்கம்பங்கள் மூலமாக மின்சாரம் வழங்க மனித உரிமைகள் ஆணையம் மூலமாக உத்தரவிட்டுள்ளதால் இதற்கான அனுமதியை உடனே வழங்க கோரி மனுக்கள் அளித்தனர்.மனுக்களை பெற்றுக்கொண்ட துணை இயக்குநர் விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.