விருதுநகர், அக்.27: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற வளர்ச்சி பணிகள் ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு துறை சார்ந்த வளர்ச்சி திட்டப்பணிகளின் முன்னேற்றம் தொடர்பான ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்தார். அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அரசு செயலாளர் தாரேஸ் அகமது, கலெக்டர் ஜெயசீலன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ‘‘அரசு அறிவித்த திட்டங்கள் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது. அறிவித்த திட்டங்களில் எத்தனை சதவீதம் முடிந்துள்ளது. அதில் தொய்வு இருக்கிறதா, எதனால் தொய்வு ஏற்பட்டுள்ளது என்பது பற்றி ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வு திட்ட அறிக்கை முதல்வருக்கு நாளை (இன்று) அனுப்பப்படும். அங்கிருந்து ஒருங்கிணைப்பு செய்யப்படும்’’ என்றார். மாலை 5.30 மணிக்கு துவங்கிய கூட்டம் இரவு 8.30 மணி வரை நடைபெற்றது. அதை தொடர்ந்து கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார். பின்னர் இரவு 8.50 மணியளவில் நெல்லை புறப்பட்டு சென்றார்.