அந்தியூர், செப்.20; தமிழகம் முழுவதும் நேற்று முதல் சுகாதாரத்துறை சார்பாக விட்டமின் ஏ திரவம் குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அந்தியூர் சுகாதார வட்டாரத்தில் மொத்தம் 10929 குழந்தைகள் உள்ளனர். இதில், 6 முதல் 36 மாதங்களுக்கு உட்பட்ட குழந்தைகள் 5624 பேருக்கும், 37 முதல் 60 மாதங்களுக்கு உட்பட்ட குழந்தைகள் 5190 பேருக்கும் வைட்டமின் ஏ திரவம் வழங்கப்பட உள்ளது. அந்தியூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சக்தி கிருஷ்ணன் தலைமையில் மருத்துவ பணியாளர்கள் அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்கி வருகின்றனர்.
இத்திட்டம் நேற்று முதல் 23ம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும், விடுபட்ட குழந்தைகளுக்கு வரும் 25ம் தேதி வரை வழங்கப்படுகிறது. இது குறித்து வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சக்தி கிருஷ்ணன் கூறுகையில்,“அங்கன்வாடி மையம் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களில் வைட்டமின் ஏ திரவத்தை அனைத்து குழந்தைகளும் தவறாமல் எடுத்துக்கொண்டு தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இதனால், மாலைக்கண் நோய் எனப்படும் கண் பார்வை குறைபாட்டை தடுக்க முடியும்’’ என்றார்.