திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். வைகாசி மாத பிரதிஷ்டை பூஜை இன்று நடக்கிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் வைகாசி மாத பூஜைகள் கடந்த 15ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதை முன்னிட்டு கோயில் நடை அன்றையதினம் மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரர் மகேஷ் மோகனர் முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடை திறந்தார்.
கோயிலில் தினமும் கணபதி ஹோமம், உஷபூஜை உள்பட வழக்கமான பூஜைகளுடன் படிபூஜை, உதயாஸ்தமய பூஜை உள்பட சிறப்பு பூஜைகளும் நடைபெற்று வருகிறது. தினமும் நெய்யபிஷேகமும் நடக்கிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை லட்சார்ச்சனை பூஜை நடைபெற்றது. வைகாசி மாத பூஜையையொட்டி சபரிமலையில் ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். அப்போது பரவலாக மழை பெய்தது. கொட்டும் மழையிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
இன்று (19ம் தேதி) பிரதிஷ்டை பூஜை நடைபெறுகிறது. அதேபோல் வைகாசி மாத பூஜையின் கடைசி நாள் என்பதால் இன்று கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று இரவு சபரி மலை கோயில் நடை சாத்தப்படும். வைகாசி மாத பூஜை மற்றும் பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு திருவனந்தபுரம், செங்கணூர், பத்தனம்திட்டா உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து சபரிமலைக்கு கேரள அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.