ஜோலார்பேட்டை : அத்தனாவூர் அரசு தொடக்கப் பள்ளியில் கட்டிடம் பழுதால், வகுப்பறைக்குள் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் உள்ள அத்தனாவூர் அரசு தொடக்கப் பள்ளியில் சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் 1ம் வகுப்பு முதல் 3ம் வகுப்பு வரை படிக்கும், மாணவர்களின் வகுப்பறை கட்டிடம் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.இந்த கட்டிடத்தின் சிமென்ட் மேற்கூரையில் பழுது ஏற்பட்டு மழைநீர் வழிந்து வருகிறது. மேலும், வகுப்பறைக்குள் மழைநீர் தேங்கி நிற்பதால் மாணவர்கள் அங்கு அமர்ந்து கல்வி கற்பதில் கடும் சிரமம் ஏற்படுகிறது. மேலும், ஒரு வகுப்பறையில் பயிலும் மாணவர்களை வேறு வகுப்பு மாணவர்களுடன் அமர வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இப்பள்ளிக்கு 5 ஆசிரியர்கள் தேவைப்படும் நிலையில், தலைமை ஆசிரியர், மற்றுமொரு ஆசிரியர் என 2 பேர் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக எல்கேஜி முதல் ஆங்கில வழிக்கல்வி துவக்கப்பட்டுள்ள நிலையில் போதிய ஆசிரியர்களை நியமிக்கப்படாமல் உள்ளது.எனவே, மாணவர்களின் கல்வி நலன் கருதி பள்ளி கட்டிடத்தை உடனடியாக புதுப்பிக்க வேண்டும். பள்ளியில் கூடுதலாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது….