செய்யாறு, மே 24: செய்யாறு அருகே கற்களை வெட்டி கடத்தியதாக அதிகாரிகள் பறிமுதல் செய்து நிறுத்தி வைத்திருந்த பொக்லைன் இயந்திரம் திருட்டு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த ஏனாதவாடி கிராமத்தில் சுடுகாடு அருகே உள்ள புறம்போக்கு நிலத்தில், கடந்த சில நாட்களாக பொக்லைன் இயந்திரம் மூலம் கருங்கற்கள் வெட்டி கடத்தப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 16ம் தேதி அப்பகுதி மக்கள் பொக்லைன் இயந்திரத்தை திடீரென சிறைபிடித்து எதற்காக கற்களை வெட்டி எடுக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினர். ஆனால் அவர்கள் சரியான பதில் அளிக்காமல், இயந்திரத்தை அங்கேயே நிறுத்திவிட்டு சென்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த விழுப்புரம் மண்டல கனிம வளத்துறையினர், வருவாய்த்துறை மற்றும் போலீசார் கடந்த அங்கு விரைந்து சென்று ஆய்வு செய்து பொக்லைனை இயந்திரத்தை பறிமுதல் செய்தனர். பின்னர், அந்த பொக்லைன் ஆஞ்சநேயர் கோயில் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட பொக்லைன் இயந்திரத்தை நேற்று முன்தினம் இரவோடு இரவாக மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலீசாருக்கும் தகவல் அளித்துள்ளனர். அதிகாரிகள் பறிமதல் செய்து நிறுத்திய பொக்லைன் இயந்திரம் திருட்டு போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.