கரூர்: அக்னி நட்சத்திர வெயில் முடிவடைந்தும் கடந்த இரண்டு நாட்களாக தினமும் 105 டிகிரியையும் தாண்டி வெயில் வாட்டி வதக்கி வருகிறது. அக்னி நட்சத்திர வெயில் மே 4ம்தேதி துவங்கி 29ம்தேதி முடிவுற்றது. அந்த காலக்கடத்தில் வெப்ப சலனம் மற்றும் புயல் சின்னம் காரணமாக கரூர் மாவட்டத்தில் அவ்வப்போது லேசான மழை பெய்து கரூரை குளிர்வித்தது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு கூட கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து மாலை நேரத்தில் மழை பெய்து, சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், தொடர்ந்து 3 நாட்களுக்கு தமிழகம் முழுதும் வெயிலின் தாக்கம் அதிகளவு இருக்கும் என கூறப்பட்டது. அதன்படி, கடந்த இரண்டு நாட்களாக 105 டிகிரியை தாண்டியும் வெயில் வாட்டி வதக்கி வருகிறது. இதுநாள் வரை 100ல் இருந்து 105 டிகிரி வரையிலும் மட்டுமே கரூர் மாவட்டத்தில் வெயில் வாட்டி வந்த நிலையில், கடந்த 2 நாட்களாக இதுவரை இல்லாத அளவுக்கு கடும் வெயில் கரூர் மாவட்டத்தில் நிலவி வருவதால் அனைத்து தரப்பினர்களும் கடும் சிரமத்தில் உள்ளனர்.கடும் வெப்பத்திற்கு இடையே மாலை நேரங்களில் மழை பெய்து சற்றே சந்தோஷப்படுத்தியது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக மழையும் இன்றி வெயில் மட்டுமே தலை விரித்து ஆடுவதால் அனைவரும் கடும் அவதியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.