அக்னியிலிருந்து அமுதம் தோன்றுகின்றது என்றும் அதுவே உலகினை வளர்க்கின்றது என்றும் சிவபுராணம் கூறுகின்றது. சிவபுராணத்தில் ‘‘அக்னி சோமாத்மகம்’’ என்ற தலைப்பில் கூறப்பட்டுள்ளன. ‘‘அக்னி சோமாத்மகம்’’ என்றால் அக்னியானது சோமமயமான அமிர்தத்தின் ஆத்மாவில் உள்ளது என்றும், அமிர்தமும் அக்னியும் உயிர்களின் ஆத்மாவின் உள்ளே இருக்கின்றது என்பதும் ஆகிய இரண்டு விதமான பொருள் உள்ளது. இந்த பிரபஞ்சம் சோமாத்மகமாகவும், சப்தார்த்த ஸ்வரூபமாகவும் உள்ளது. சிவனிட்ட கட்டளையே சிவசக்தியாக உள்ளதென்று வாயு தேவன் முனிவர்களுக்குக் கூறினான். அக்னி என்பது சிவசம்பந்தமான கோரவடிவமான ஒளிவடிவம். சோமம் என்பது சிவசக்தியரின் அருள்வடிவமாகிய அமுதரசம். அக்னியிலிருந்து அமுதம் உண்டாகி அந்த அக்கினியை வளர்க்கின்றது. அந்த அக்கினியை வளர்த்து அவியைச் சொரிவதால் பயிர்கள் செழிக்க மேகமும் அதன் மூலம் மழையும் உண்டாகின்றன. மழையால் உலகம் செழிக்கின்றது. இந்தக் காரணங்களால் அக்னி சோமாத்மகம் என்றாகிறது. அக்னியானது அமிர்தத்துடன் கூடி நுண்மையாவும், பருமையாகவும் ஐந்து பூதங்களில் விரவி நிற்கும். அதுவே ஒளியாகவும், உயிரின் சாரமாகவும் இருக்கும். அக்கினியே ஒளியும் சூரியனுமாகும். அமிர்தம் சந்திரனாகவும், அலைகள் வீசும் தண்ணீராகவும் இருக்கின்றது.இவை உலகிற்கு ஆதாரமாகவும், சக்தியாகவும் விளங்குகின்றன. அக்னியே சிவ வடிவம், அமிர்தம் சக்தி மயம். இந்த அக்னி, சோமாத்மகமாகவே உலகம் விளங்குகின்றது. தன் உடலில் தோன்றும் அக்னியால் பற்றுகளைக் கொளுத்தி அப்போது பெருகும் அமுதத்தால் அச்சாம்பலை நனைத்து அதனை அணிபவர்கள் பாவங்களை ஒழித்து சிவமயமாகின்றனர். அவர்கள் மரணத்தை ஒழித்து சிவமுக்தியை அடைகின்றனர். யோகப்பயிற்சியை உடைய பெரியோர்கள் தங்கள் யோக வல்லமையால் சூரிய கலை, சந்திர கலை என்ற இரண்டையும் அக்னிகலையில் ஒடுக்கி அந்த அக்னியில் தோன்றும் அமுதத்தைப் பருகி நித்தியானந்த மோட்சத்தை அடைகின்றனர்.- ஆட்சிலிங்கம்…
அக்னி சோமாத்மகம்
previous post