புதுடெல்லி: ஜீ குழுமத்துக்கு வழங்கிய மொத்த கடன் தொகையான ரூ.6,500 கோடியில் ரூ.5,000 கோடியை யெஸ் வங்கி தள்ளுபடி செய்துள்ளது. சுபாஷ் சந்திரா ஜீ குழுமத்தை நடத்தி வருகிறார். இந்த ஜீ குழுமம் யெஸ் வங்கியிடமிருந்து ரூ.6,500 கோடி கடனாக பெற்றிருந்தது. இந்நிலையில், ஒருமுறை தீர்வின் (ஓடிஎஸ்)அடிப்படையில் ரூ.1,500 கோடியை 7 மாதங்களில் செலுத்த ஜீ குழுமம் முன் வந்தது. இதனை ஏற்றுக் கொண்ட யெஸ் வங்கி, ரூ.6,500 கோடியில் 75 சதவீதத்தை அதாவது ரூ.5,000 கோடியை தள்ளுபடி செய்துள்ளது.
இதன் மூலம், டிஷ் டிவி மற்றும் ஜீ லேர்ன் உள்ளிட்ட சொத்துக்களில் குடும்பத்தின் பங்குகள் மற்றும் டெல்லியில் உள்ள பங்களா உட்பட மூன்று சொத்துக்களின் உரிமையை ஜீ குழுமம் மீண்டும் பெற முடியும். இதனால், இந்த நடவடிக்கை ஜீ குழுமத்தின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது. மேலும், தற்போது நடந்து வரும் ஜீ-சோனி ஒப்பந்த நடவடிக்கைக்கான வழியை தெளிவுபடுத்த உதவும் என்று கூறப்படுகிறது.