செங்கல்பட்டு: மணிப்பூரில் நடந்து வரும் வன்முறை கலவரம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமையை தடுக்காத ஒன்றிய அரசை கண்டித்து, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் செங்கல்பட்டு அரை நிர்வாணத்துடன் அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் தலைமை தபால் நிலையம் அருகே நேற்று மாலை நடந்தது. மாவட்ட தலைவர் கேவி.சேகுவேராதாஸ் தலைமை தாங்கினார். இதில் 100க்கும் மேற்பட்டோர் அரைநிர்வாணத்துடன் ஒன்றிய-மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
இதில் இளைஞர் பெருமன்றத்தின் மாவட்ட துணை செயலாளர் நாகராஜ், தொகுதி தலைவர் இன்பராஜ், மாற்றுத்திறனாளி சங்க மாவட்ட செயலாளர் அன்பரசு, வினாயகம், சுபாஷ், கானா மாசிலாமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அனைவரும் அரைநிர்வாண கோலத்துடன் தலைமை தபால் நிலையத்துக்கு சென்று, பிரதமர் மோடி மற்றும் மணிப்பூர் மாநில முதல்வருக்கு கண்டன வாசகங்களுடன் அஞ்சல் அட்டைகள் அனுப்பினர்.