Sunday, May 5, 2024
Home » இளைஞர்களுக்கு தீவிரவாத பயிற்சி அளித்த விவகாரம் என்ஐஏ அதிகாரிகள் 5 பேரிடம் தீவிர விசாரணை: சத்தியமங்கலம் காட்டிற்கு அழைத்து செல்லவும் முடிவு; சிறப்பு நீதிமன்றம் உத்தரவுப்படி 5 நாள் காவலில் எடுப்பு

இளைஞர்களுக்கு தீவிரவாத பயிற்சி அளித்த விவகாரம் என்ஐஏ அதிகாரிகள் 5 பேரிடம் தீவிர விசாரணை: சத்தியமங்கலம் காட்டிற்கு அழைத்து செல்லவும் முடிவு; சிறப்பு நீதிமன்றம் உத்தரவுப்படி 5 நாள் காவலில் எடுப்பு

by Karthik Yash

சென்னை: இளைஞர்களுக்கு தீவிரவாத பயிற்சி அளித்த விவகாரத்தில் தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்ட 5 பேரை சிறப்பு நீதிமன்றம் உத்தரவுப்படி என்ஐஏ அதிகாரிகள் 5 நாள் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு நிதி உதவி மற்றும் ஆட்கள் அனுப்பியதாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் கேரளா, கர்நாடகா, தமிழகம், உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம் என 15 மாநிலங்களில் ஒரே நேரத்தில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள், நிர்வாகிகள் வீடுகளில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதி அதிரடி சோதனை நடத்தினர்.

தமிழ்நாட்டை சேர்ந்த 10 பேர் உட்பட நாடு முழுவதும் 106 பேர் கைது செய்யப்பட்டனர். அதைதொடர்ந்து, ஒன்றிய அரசு, நாடு முழுவதும் உள்ள பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மற்றும் அதன் 8 துணை அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து உத்தரவிட்டது. மீண்டும் கடந்த மாதம் 9ம் தேதி சென்னை, மதுரை, தேனி உள்ளிட்ட 6 இடங்களில் சோதனை நடந்தது. டிஜிட்டல் ஆவணங்கள், கூர்மையான ஆயுதங்கள் பறிமுதல் செய்னர். பின்னர் என்ஐஏ அதிகாரிகள் சென்னையை சேர்ந்த அப்துல் ரசாக், மதுரையை சேர்ந்த முகமது யூசுப், முகமது அப்பாஸ், திண்டுக்கல் பகுதியை சேர்ந்த கைசர், தேனியை சேர்ந்த சாதிக் அலி ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட 5 பேரும், இந்தியாவில் கடந்த 2047ம் ஆண்டு இஸ்லாமிய அரசு நிறுவுவதற்காக தற்போது தடை செய்யப்பட்ட பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மூலம் அதற்கான செயல்களில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதற்காக தங்களது அமைப்பில் சேரும் இளைஞர்களுக்கு பயங்கர ஆயுதங்களை எப்படி கையாள்வது குறித்து பயிற்சி அளித்து இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் தமிழகத்தில் கைது செய்யப்பட்ட அப்துல் ரசாக், முகமது யூசுப், முகமது அப்பாஸ், கைசர், சாதிக் அலி ஆகியோரை 5 நாள் கவாலில் எடுத்து விசாரணை மனு தாக்கல் செய்தனர். அதன்படி சிறப்பு நீதிமன்றம் 5 பேரையும் 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி வழங்கியது.

அதைதொடர்ந்து, டெல்லியில் இருந்து வந்த என்ஐஏ அதிகாரிகள் சிறையில் உள்ள 5 பேரை அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, இளைஞர்களுக்கு சத்தியமங்கலம் காட்டில் ஆயுதம் பயிற்சி அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் 5 பேரையும் அங்கு அழைத்து சென்ற நேரில் விசாரணை நடத்த என்ஐஏ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். மேலும், இவர்களிடம் ஆயுதப்பயிற்சி பெற்ற இளைஞர்கள் யார் யார்? அதன் பின்னணி என்பது குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது. இந்த விசாரணை முடிவில் மேலும் சிலர் கைது செய்யப்படலாம் என்று என்ஐஏ வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

You may also like

Leave a Comment

2 × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi