சென்னை: தங்கத்தின் விலை கடந்த ஏப்ரல் 19ம் தேதி ஒரு சவரன் ரூ.55,120 என்ற புதிய உச்சத்தை தொட்டது. இது ஏழை மற்றும் நடுத்தர மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பிறகு தங்கம் விலை உயர்வும், குறைவதுமாக இருந்து வருகிறது. நேற்று முன்தினம் யாரும் எதிர்பாராத வகையில் தங்கம் விலை அதிரடி சரிவை சந்தித்தது. கிராமுக்கு ரூ.115 குறைந்து ஒரு கிராம் ரூ.6,635க்கும், சவரனுக்கு ரூ.920 குறைந்து ஒரு சவரன் ரூ.53,080க்கும் விற்கப்பட்டது. இந்த விலை குறைவு நகை வாங்குவோரை சற்று மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இது ஒரு நாள் கூட நீடிக்கவில்லை. நேற்று தங்கம் விலை மீண்டும் கிராமுக்கு ரூ.80 அதிகரித்து ஒரு கிராம் ரூ.6,715க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,720க்கும் விற்கப்பட்டது. வரும் 10ம் தேதி அட்சயதிரிதியை வருகிறது. 11ம் தேதியும் அட்சயதிரிதியை நீடிக்கிறது. அட்சயதிரிதியை அன்று ‘குண்டுமணி நகையாவது வாங்க வேண்டும்’ என்ற எண்ணம், மக்கள் மனதில் சமீபகாலமாக நிலைத்து விட்டது. இந்த நேரத்தில் தங்கம் விலை உயர்ந்து வருவது அட்சயதிரிதியை அன்று நகை வாங்க காத்திருப்பவர்களுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்தியுள்ளது.