புழல்: சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் அந்தோணி ராஜ்(37). இவர் மாதவரம் பொன்னியம்மன் மேடு, கணக்கன்சத்திரம், புழல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வசிப்பவர்கள், டீக்கடை வியாபாரிகளுக்கு வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாதவரம் பொன்னியம்மன்மேடு பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு சென்று பணத்தை வசூல் செய்தார். அப்போது வீட்டில் தனியாக இருந்த ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அச்சிறுமி பெற்றோர் வீட்டுக்கு வந்ததும், நடந்ததை அவர்களிடம் அழுதவாறு தெரிவித்தாள்.
இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன் அச்சிறுமிக்கு சுரேஷ் அந்தோணி ராஜ் பாலியல் தொல்லை கொடுத்தார். அப்போது மறைந்திருந்த சிறுமியின் பெற்றோர் அவரை மடக்கி, பிடித்து சரமாரியாக அடித்து, உதைத்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், புழல் அனைத்து மகளிர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சுரேஷ் அந்தோணி ராஜை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அதில், சிறுமிக்கு இவர் பாலியல் தொல்லை கொடுத்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து, போக்சோவில் அவரை கைது செய்த போலீசார், மாதவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.